Tamilnadu

“சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பா.ஜ.க பிரமுகர்கள் உள்பட 30 பேர் கைது” : கோவை போலிஸார் நடவடிக்கை!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சாரதி பகுதியில் பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்கு சொந்தமாக ரெயின்ட்ரி கன்ட்ரி கிளப் ஒன்று உள்ளது. இந்த ரெயின்ட்ரீ கன்ட்ரி கிளப் வளாகத்தில் அடிக்கடி சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சிங்காநல்லூர் போலிஸார் சுமார் 30க்கும் மேற்பட்டோர் அங்கு விரைந்தனர். அங்கு சூதாட்டம் நடைபெற்றது உறுதியானதைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தபட்ட ரூ.56 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமல்லாது சூதாட்டத்தின் போது ரொக்க பணம் பயன்படுத்துவதற்கு பதிலாக 10, 20 என எண்கள் பொறிக்கப்பட்ட டோக்கன்களை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றையும் போலிஸார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அதன் உரிமையாளரான தேவராஜ் என்பவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ளவரை போலிஸார் தேடி வருகின்றனர். மேலும் இதில் கைதான 30 பேரில் 3 பேர் பா.ஜ.க பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவர் தினமான நேற்று, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு மதுவிற்பனை செய்துவந்ததாகவும் அப்பகுதியைச் சார்ந்தவர்கள் கூறி வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மதுவிற்பனையில் ஈடுபட்ட 86 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

Also Read: “நிதி ஆயோக் எதிர்ப்பை மீறி அதானிக்கு விமான நிலையங்களை ஒப்படைத்த மோடி அரசு” : வெளிச்சத்திற்கு வந்த மோசடி!