Tamilnadu
“சி.பி.ஐ விசாரணை என்றவுடன் மிரண்டு போய் உளறும் பொள்ளாச்சி ஜெயராமன்” - ஆர்.எஸ்.பாரதி சாடல்!
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல பொள்ளாச்சி ஜெயராமன் வாய்ச்சவடால் விடுவதாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார்.
பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அருளானந்தத்திற்கும் அ.தி.மு.க-வின் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தனக்கும், அருளானந்த்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக உலுக்கிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இப்பாலியல் சம்பவத்தை குறித்து உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தவறியதால் இச்சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. கையிலெடுத்தது.
இதுவே ஆளும் எடப்பாடி அரசுக்கு சம்மட்டி அடி என்பதை எடப்பாடியும், பொள்ளாச்சி ஜெயராமனும் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் சி.பி.ஐ.யினுடைய விசாரணையில் துவக்கத்திலேயே ஆளும் அ.தி.மு.க.வின் கோவை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருளானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் அருளானந்தம் அமைச்சர் வேலுமணி மற்றும் கோவை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளார் என்பதை உணர்த்த இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பத்திரிகையிலும், ஊடகங்களிலும் வெளிவந்ததை வேலுமணியோ, பொள்ளாச்சி ஜெயராமனோ மறுக்க முடியுமா?
பொள்ளாச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. நிகழ்ச்சி ஒன்றில் பேசுகிறபோது "குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது", "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்கிற பழமொழிக்கு ஏற்ப பொள்ளாச்சி ஜெயராமன் வாய் சவடால் அளித்திருக்கிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றி பொறுப்பற்ற முறையில் இவர் தொடர்ந்த வழக்கில், தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (எழுத்துப் பூர்வமாக எந்தவிதமான) இந்த வழக்கு குறித்து எதுவும் பேசமாட்டேன் என்று எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்பதை இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல சி.பி.ஐ விசாரணை என்றவுடன் மிரண்டு போயிருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் தவறான தகவல்களை பொது வெளியில் பேசியிருக்கிறார்.
"சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது போல" இவர் மகன் குற்றமற்றவர் என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைப் பதவி விலக சொல்வது என்பது,மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மேற்கு மண்டலத்தில் பெருகிவரும் செல்வாக்கை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக பிதற்ற ஆரம்பித்து விட்டார். சி.பி.ஐ. விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பிறகு தான் யார்? யார்? இந்த கொடூரமான சம்பவத்தில் பங்கு பெற்றவர் என்பது வெளிச்சத்திற்கு வரும்.
சி.பி.ஐ. விசாரணையில் குற்றம் புரிந்தவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தி.மு.க சட்டத்துறை மூலமாக வழக்கை மேற்கொண்டு நடத்தி, உண்மை குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!