Tamilnadu

“அரசு மருத்துவ கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு நிகராக கட்டண கொள்ளை” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!

அரசு மருத்துவ கல்லூரி எனக் கூறிக்கொண்டு தனியார் கல்லூரிக்கு நிகராக ராஜா முத்தையா கல்லூரி மருத்துவ மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு உயர்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் ராஜா முத்தையா மருத்துவ பல் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி, அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் 26 முறை வெவ்வேறு வழிகளில் போராட்டங்களை நடத்தியும் இதனை அரசு கண்டு கொள்ளவில்லை. இதனையடுத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சங்கம் போன்ற சங்கங்களின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் அனைத்து கட்சி தரப்பினர் கலந்துகொண்டனர். தி.மு.க சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டார். இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நிகராக கட்டணம் வசூலிக்கும் அரசுக்கு எதிராக மாணவ, மாணவிகள் பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், “மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் வண்ணம் எடப்பாடி அரசு, அரசு மருத்துவக்கல்லூரி என கூறிக்கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நிகராக கட்டணம் வசூலிக்கும் இம்மாதிரியான செயல் கண்டிக்கத்தக்கது.

மருத்துவ மாணவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த மாணவர்களுக்கும் தி.மு.க எப்போதும் ஆதரவாக இருக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று மாணவர்களின் கனவை நனவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பார்” என்றும் கூறினார்.

Also Read: சென்னை மின்சார ரயிலில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : தமிழகத்தில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு?