Tamilnadu

“100% அல்ல... திரையரங்குகளில் 50% சீட் மட்டுமே நிரப்பலாம்” - வழக்கம்போல் ‘பல்டி’ அடித்த அ.தி.மு.க அரசு!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஜனவரி 4-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களின் பாதுகாப்பு பற்றிய யோசனையின்றி 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளித்து, மக்களை பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளது அ.தி.மு.க அரசு என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

திரையரங்குகளில் 100% இருக்கைகளை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதினார்.

மேலும், இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்துத் திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 4.1.2021 அன்று, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், ரயில், பஸ் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், திரைப்படப் படப்பிடிப்பு ஆகியவற்றுக்குப் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100 சதவீத இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்து, 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மத்திய அரசின் அறிவுரையைக் கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்துத் திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது.

கொரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவசர முடிவுகளை எடுக்கும் அ.தி.மு.க அரசின் போதாமைகளுக்கு இந்த அறிவிப்பும் ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது.

Also Read: “திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்புவது ஆபத்தானது” - மீண்டும் எச்சரிக்கும் பிரதீப் கவுர்!