Tamilnadu

ரூ.280 கோடி முறைகேடு வழக்கு : துணைவேந்தர் சூரப்பா ஆஜராகும்படி சம்மன் அனுப்ப கலையரசன் ஆணையம் திட்டம்?

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் ஊழல் மற்றும் பணி நியமனம் பல்கலைக்கழகத்திற்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை அமைத்தது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்தக் குழுவிற்கு 3 மாதத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழக பதிவாளர் கருணாமூர்த்தி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி சுமார் 6 பெட்டிகள் கொண்ட ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

மேலும் சில கூடுதல் ஆவணங்கள் ஆணையம் தரப்பில் கேட்கப்பட்டதைடுத்து மீண்டும் அத்தகைய ஆவணங்கள் அளிக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த விசாரணை ஆணையம் சில முக்கிய ஆவணங்களை அண்ணா பல்கலைகழகம் தர மறுப்பு தெரிவித்துள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பி அவர்களையும் நேரில் ஆஜராகுவதற்கு நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: சட்டத்துக்கு மேலானவரா சூரப்பா? அவரை சஸ்பென்ட் செய்யாதது ஏன்? - அரசுக்கும் ஆளுநருக்கும் முத்தரசன் கேள்வி!