Tamilnadu

“பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆட்சி தி.மு.க ஆட்சிதான்” : பொன்முடி MLA பேச்சு !

அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வி.புத்தூர், மேலகொண்டூர் கிராமங்களில் அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற மக்கள் கிராம சபை கூட்டம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், “பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, வேலைவாய்ப்பு உரிமைகள், திருமண உதவித் திட்டம் ஆரம்பப்பள்ளியில் பெண்கள் என பெண்களுக்கான முக்கியத்துவம் வழங்கப்பட்ட ஆட்சி தி.மு.க ஆட்சிதான்” என பேசினார்.

மேலும், கிராம பொதுமக்கள் சார்பாக பேருந்து வசதி, சாலை வசதி ஆகியவை செய்து கொடுக்க கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற கழக துணை பொது செயலாளர் பொன்முடி, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக கிராமத்தின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் மண்டக்க மேடு ஊராட்சியில், ஒன்றிய கழக செயலாளர் விசுவநாதன் ஏற்பாட்டில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட க.பொன்முடி மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கிராம மக்கள் சார்பாக பேருந்து வசதி, ஆரம்ப சுகாதாரம், சாலை வசதி, இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை ஆகியவை கடந்த பத்தாண்டுகளாக செய்து கொடுக்கப்படவில்லை. எனவே அதனை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் கோரிக்கையை ஏற்ற பொன்முடி எம்.எல்.ஏ, “இன்னும் 4 மாத காலத்திற்குள் கழக ஆட்சி தமிழகத்தில் மலரும்; அப்போது தமிழகத்தின் முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வருவது உறுதி. அதன்பின்னர் திருக்கோயில் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகள் உடனடியாக செய்து கொடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.

பின்னர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடகம் மேடையையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட கழக செயலாளர் புகழேந்தி, பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் முருகன், புஷ்பராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Also Read: “தி.மு.க ஆட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்” : துரைமுருகன் உறுதி!