Tamilnadu
கொரோனா திரிபு: இன்னொரு ஊரடங்கு மோசமான நிலையை ஏற்படுத்தும் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!
2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 27ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர் பலியாகியுள்ளனர். தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உருமாற்றம் பெற்ற கொரோனா பிரிட்டனில் பரவத் துவங்கியுள்ளது.
மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமும் கொரோனா பரவியதால், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இன்னொரு ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும் எனவும், பிரிட்டனில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்து, வரும் பயணிகளை கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் எனவும், ஐந்தாவது நாள் கொரோனா பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாவிட்டால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !