Tamilnadu

“வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை” : உதயநிதி ஸ்டாலின் உறுதி!

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை பயணத் திட்டத்தின்படி தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

அதன்படி இன்று திருச்சி தெற்கு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி (தெ) மாவட்டம் மணப்பாறை தொகுதி துவரங்குறிச்சியில் 70 அடி உயரமுள்ள கழக கொடியை ஏற்றி வைத்து பரப்புரையை துவங்கினார்.

பின்னர், மணப்பாறை தொகுதி மருங்காபுரியில் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். அங்கு நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்னர் அவர்களிடையே பேசிய உதயநிதி ஸ்டாலின், “காழ்ப்புணர்ச்சியின் காரணத்தால் தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட சமத்துவபுரத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத அ.தி.மு.க அமைச்சர்கள் வீட்டுக்கு செல்வர் - கழக ஆட்சியில் சமத்துவபுரம் முறையாக சீரமைக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து மணப்பாறை தொகுதியில் ஹாக்கி-கபடி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலைவாய்ப்பு - பதவி உயர்வு எதுவுமில்லையென விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் அருகே தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது மக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினருக்கு நெடுஞ்சாலைத்துறையில் சாலை போட ஒப்பந்தம் அளித்துள்ளார். இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார்.

அதேப்போல், எல்.இ.டி பல்புகள் கொள்முதலில் 100 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளது. அதுமட்டுமல்லாது. வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு இறந்ததும் 3 நாட்களாக அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. ரூ.800 கோடி கொடுத்தால் தான் ஒப்படைக்கப்படும் என்றனர்.

ஒரு அமைச்சரே அவ்வளவு கோடி வைத்துள்ளார் என்றால் அ.தி.மு.க. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எவ்வளவு கோடி ஊழல் செய்திருப்பார்கள் என நினைத்து பாருங்கள். மத்திய அரசு வலுக்கட்டாயமாக நீட் தேர்வினை அமல்படுத்தியுள்ளது. இதனால் கிராமப்புற மாணவ, மாணவிகள் மருத்துவ கல்வி படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, 100 நாள் வேலைதிட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படவில்லை. இதனால் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மக்கள் முடிவெடுத்துவிட்டனர். ஆட்சி மாறுவது உறுதி. தி.மு.க ஆட்சியில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: 10 ஆண்டுகளாக முடக்கி வைத்துவிட்டு தேர்தல் நேரத்தில் பட்டா மேளாவை அதிமுக அரசு நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின்