Tamilnadu

“கடந்த 10 ஆண்டுகளாக வணிகர்கள் தங்களை பாதுகாப்பதற்கே பெரும்பாடு படுகிறார்கள்” - விக்கிரமராஜா பேட்டி!

வணிகர்கள் கடந்த 10 ஆண்டுகளில் தங்களை பாதுகாப்பதற்கே பெரும் பாடுபட்டுக் கொண்டிருப்பதுதான் உண்மை என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட வணிகர்களின் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழக அரசால் சென்னையில் விதிக்கப்பட்ட குப்பை வரியினை எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்கிறோம். அதேபோல் தமிழகம் முழுவதும் குப்பை வரியை உடனடியாக அடியோடு ரத்து செய்யவேண்டும்.

தமிழகம் முழுவதும் நகராட்சியின் சார்பில் உள்ள கடைகளுக்கு வாடகை விகிதம் சீராக இல்லாமல் மாவட்டவாரியாக வேறுபட்டு உள்ளது. அனைத்து கடைகளுக்கும் உடனடியாக சீரான வாடகை விகிதத்தை முறைப்படுத்த வேண்டும்.” எனக் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறார். அதனை ஆணையர் சரி செய்து கொள்ளவில்லை என்றால் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் நாளன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

தமிழகம் முழுவதும் வணிகர்களை சந்தித்து தற்பொழுது ஆய்வு செய்து வருகிறோம். தலைமை நிர்வாகிகளின் கூட்டம் நடத்தப்பட்டு சரியான முடிவு எடுப்போம். வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்குத்தான் வணிகர்களின் வாக்கு” எனத் தெரிவித்தார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் வணிகர்கள் முன்னேற்றப் பாதையில் சென்றுள்ளனரா என்ற கேள்விக்கு பதிலளித்த விக்கிரமராஜா, “வணிகர்கள் கடந்த 10 ஆண்டுகளில் தங்களை பாதுகாப்பதற்கே பெரும் பாடுபட்டு கொண்டிருப்பதுதான் உண்மை” எனத் தெரிவித்தார்.

Also Read: “உயிர்களைக் குடித்தும் அடங்காத விளம்பர வெறி” - சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க நிர்வாகி!