Tamilnadu

“ஓ.பி.எஸ்ஸுக்கு கேரளாவில் 2000 கோடி சொத்து; மாலத்தீவில் பணம் பதுக்கல்” - தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து வருமானவரித் துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

தேனி என்.ஆர்.டி நகர் பகுதியில் அமைந்துள்ள தி.மு.க அலுவலத்தில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “துணை முதல்வர் ஓ.பி.எஸ், கேரள மாநிலத்தில் ரூ.2,000 கோடிக்கு சொத்து வைத்துள்ளதாக அம்மாநில பத்திரிகையான மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து குற்றம்சாட்டும் என் மீதும் கேரள பத்திரிக்கை மீதும் எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை. இதிலிருந்தே ஊழல் செய்து கேரளாவில் சொத்து சேர்த்தது உறுதியாகிறது.

ஓ.பி.எஸ் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து வருமானவரித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை முதல்வரின் ஊழலை மக்களிடையே எடுத்துரைத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க பிரச்சாரம் மேற்கொள்ளும்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க ஊழல் குறித்த பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரிடம் வழங்கினார். இரண்டாம் கட்ட ஊழல் பட்டியல் தயாராகி வருகிறது. அதில் ஓ.பி.எஸ்ஸின் ஊழல் பட்டியல் இடம்பெறும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே உரிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் இல்லாத நிலையில், ஊழல் குற்றங்களை மறைப்பதற்காகவே மினி கிளினிக் திறக்கப்படுகிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொரீஷியஸ், மாலத்தீவு ஆகிய இடங்களுக்கு தனி விமானத்தில் சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

யாரிடம் அனுமதி பெற்று அவர் சென்றார் என்பது தெரியவில்லை. ஊழல் பணத்தைப் பதுக்குவதற்காகவே அங்கு சென்றுள்ளார் என நான் குற்றம்சாட்டுகிறேன். இதுகுறித்து ஓ.பி.எஸ் தரப்பு இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.” எனத் தெரிவித்தார்.

Also Read: “சம்பந்தி மூலம் தனது பாக்கெட்டை நிரப்பி ஊழல் ஆட்சி புரியும் எடப்பாடி பழனிசாமி” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!