Tamilnadu

“தகராறை தடுக்க முயன்ற காவலர் மீது கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது”: நாகர்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோடு சாலையில் திருமண விழாவிற்கு சென்று வந்து கொண்டு இருந்த வாகனம் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கியூ பிரிவு காவலர் சிவா, போக்குவரத்தை சரிசெய்ய முயன்றுள்ளார். மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வாகனங்களை அப்புறபடுத்தி சமாதனம் செய்ய முற்பட்டார்.

அப்போது ஆத்திரம் அடைந்த திருமண வீட்டிற்கு சென்று வந்த கும்பல் கியூ பிரிவு காவலரை சரமாரியாக தாக்கினர். தாக்குதலின் போது, “நான் காவல்துறையை சேர்ந்தவர்” என பல முறை கூறிய பின்னரும், அதனை சிறிதும் பொருட்படுத்தாத அந்த கும்பல் தொடர்ந்து தாக்கினர்.

மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் காவலரை காப்பாற்றிய நிலையில், இச்சம்பவம் குறித்து கோட்டாறு போலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து தப்ப முயன்ற இருவரை பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் மேலும் இருவரை கைது செய்துள்ளனர்.

இதில் பள்ளம் பகுதியை சேர்ந்த ஜெயஸ்டன் (40), ஜார்ஜ் (49), அந்தோணி, ஜவஹர் (33) ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலிஸார் சிறையில் அடைந்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் தகராறில் ஈடுபட்டு கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய கும்பல், கியூ பிரிவு காவலரை காட்டுமிராண்டி தனமாக தாக்கிய சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க தோழமைக் கட்சிகளின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு”: எடப்பாடி அரசு அராஜகம்!