Tamilnadu

“வழிப்பறியில் ஈடுபட்டவர்களிடமிருந்து தப்பிக்க ஏரியில் விழுந்த மாணவர் பலி”: திருவள்ளூர் அருகே நடந்த சோகம்!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில், இவரது மகன் அகிலேஷ் (19). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9ம் தேதி தன் சக நண்பர்கள் ஆறு பேருடன் இரவு நேரத்தில் சோழவரம் ஏரியின் அருகில் சென்றுள்ளார். அங்கு இரவு முழுவதும் அங்கேயே இருந்துள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை 2 மணி அளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர்களை உருட்டுக்கட்டை மற்றும் கத்தியால் தாக்கி அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணத்தை மிரட்டி பிடுங்கியுள்ளனர்.

இதில், பயந்து போன அகிலேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். வெட்டு காயங்களிடன் 5 பேரும் சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். ஆனால், காவல் துறையினர் அவர்கள் 5 பேரையும் காலை வரை காவல் நிலையைத்திலேயே வைத்திருந்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியமாக இருந்துள்ளனர். ஆனால் அகிலேஷ் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அகிலேஷின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் சோழவரம் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சோழவரம் போலிஸார் அகிலேஷை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் முழுவதும் அகிலேஷ் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் சோழவரம் ஏரியின் அருகே வாலிபரின் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சோழவரம் போலிஸார் மற்றும் அவரது நண்பர்கள் சென்று பார்த்தபோது இறந்து கிடப்பது அகிலேஷ் என்பது உறுதி செய்தனர்.

இது குறித்து சோழவரம் போலிஸார் வழக்கு பதிவு செய்து அகிலேஷ் சோழவரம் ஏரியில் தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்களைத் தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அகிலேஷ் நண்பர்கள் காயமுற்ற இரண்டு பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அகிலேஷின் நண்பர்கள் இரவு காவல் நிலையத்திற்கு வந்து தகவல் சொன்ன போதே சம்பவ இடத்திற்கு போலிஸார் சென்று பார்த்திருந்தால் இந்த மரணம் நிகழ்ந்திருக்காது என்றும் போலிஸாரின் அலட்சியப்போக்கே காரணம் என்றும் அவரது நண்பர்களும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: “விவசாயிகளின் 2ம் கட்ட போராட்ட அறிவிப்பால் டெல்லி நேஷனல் ஹைவே மூடல்” : 17ம் நாளாக தீவிரமடையும் போராட்டம்!