Tamilnadu

“ரூ.312 கோடி மாநகராட்சி பணத்தை அபகரித்த அ.தி.மு.க” - ஆதாரங்களுடன் மா.சுப்பிரமணியன் MLA குற்றச்சாட்டு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட உணவை, அ.தி.மு.கவினர் அவர்கள் செலவில் வழங்குவது போல கொடுத்து வருவதாக தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தெற்கு தி.மு.க மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயரும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் சைதாப்பேட்டை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா காலத்தில் கொள்ளையடித்தது போல வெள்ளம் பாதித்த சூழலிலும் அ.தி.மு.கவினர் கொள்ளையடிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்குவதில் அ.தி.மு.கவினர் பல்வேறு முறைகேடுகளிலும், விதிமீறலிலும் ஈடுபட்டுள்ளனர்.

அரசு வழங்கும் உதவியை மாநகராட்சிப் பணியாளர்கள் சார்பில் உணவை வழங்காமல், அரசுப் பணத்தில் அ.தி.மு.கவினர், அவர்கள் செலவழிப்பதுபோல் இறங்கிச் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதுபற்றி மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும், தொடர்ந்து அ.தி.மு.கவினர் அரசு பணத்தில் உணவை வழங்கி வருகின்றனர். இதன் மூலம் 312 கோடி ரூபாய் அரசுப்பணம் அபகரிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பான ஆதாரங்களையும் செய்தியாளர்கள் முன்னிலையில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “மதுரவாயல் முதல் வாலாஜா வரை உள்ள சாலை முற்றிலும் மோசமாக உள்ளது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், சுங்கக் கட்டணங்கள் மட்டும் வசூலிக்கப்படுவதை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இது மிகப்பெரும் அளவில் மக்களை சுரண்டும் செயல்.

மாநகராட்சி எல்லைக்குள் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கக் கோரி முதல்வரிடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

சுங்கச்சாவடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சோழங்கநல்லூரை அடுத்த அக்கரையில் நடைபெற உள்ளது.” என அறிவித்தார்.

மேலும், “சட்ட அறிவு மிகுந்த தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கிளைச் செயலாளராக இருக்கக்கூட தகுதியற்றவர் என முதல்வர் எடப்பாடி சொல்கிறார். ஒரு கட்சிக்கான அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்கத் தகுதியற்றவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் முதல்வராக இருப்பது தமிழகத்தின் போதாத காலம்.

கடலூரில் வெள்ளம் சூழ்ந்ததை பார்வையிட்டு, பக்குவமற்ற வியாக்கியானத்தை முதல்வர் அளித்தார். பருவமழைக்கு முன்னரே மழைநீர் கால்வாய்களை தூர் வாரவும் அதற்கான சேவை ஆய்வுக் கூட்டங்களையும் நடத்த தமிழக அரசு தவறி விட்டது” எனக் குற்றம்சாட்டினார்.

Also Read: தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதல்வராக்க தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம்: கே.என்.நேரு பேட்டி!