Tamilnadu

சிபிஐ எனக்கூறி நண்பரிடமே ரூ.10 கோடி பறிக்க முயன்ற கும்பல்.. வழக்கறிஞர் உட்பட ஐவர் சென்னையில் கைது!

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ராகேஷ் (40). இவர் அதே பகுதியில் இயங்கி வரும் மீனாட்சி மருத்துவ கல்லூரியை நிர்வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு ராகேஷ் குடும்பத்துடன் வீட்டிலிருந்த போது திடீரென்று ராகேஷின் நண்பர் ராம் சுப்பிரமணியம் மற்றும் சுமார் 8 பேர் வீட்டில் நுழைந்து தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என அடையாள அட்டையை காண்பித்துள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த பணியாளர்களை அடித்து வெளியே தள்ளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு சிலை கடத்தல் வழக்கில் ராகேஷ்க்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு பதிவு செய்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் கைது செய்ய வந்ததாகவும் கூறி ராகேஷை மிரட்டி உள்ளனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால் 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என ராகேஷிடம் கேட்டு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

அப்போது சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் போலீசார் வீட்டிற்குள் இருந்தவர்களை மடக்கி பிடித்தனர். அதில் இரண்டு நபர்கள் தப்பியோடி விட்டனர்.

பிடிப்பட்ட 5 நபர்களிடம் நடத்திய விசாரணையில் போலி சிபிஐ அதிகாரிகள் என தெரியவந்தது. மேலும் ராகேஷின் நண்பரான ராம் சுப்பிரமணி என்பவர் ராகேஷிடம் அதிக பணம் இருப்பதாகவும், சிபிஐ அதிகாரிகள் போல் நடித்தால் பணம் பறிக்கலாம் என சதி திட்டம் தீட்டி அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் மதுரவாயல் பகுதியை சேர்ந்த கேமரா மேன் ராம சுப்பிரமணி, குன்றத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் நரேந்திர நாத், அனகபுத்தூரை சேர்ந்த ஸ்டாலின்(40), யோவான், சங்கர் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: திருட்டு பைக்குகளை வைத்து பொறியியல் ப்ராஜெக்ட் செய்து கொடுத்த பட்டதாரி.. சென்னையில் வசமாக சிக்கிய கும்பல்