Tamilnadu

நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னையில் பரவலாகவும் மழை பெய்யக்கூடும்!

புரேவி புயல் வடக்கு இலங்கை பகுதியை கடந்து இன்று காலை 8.30 மணி நிலவரப்படி வடக்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. பாம்பனில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு, தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பாம்பன் பகுதியில் நிலைகொண்டிருக்கும். அதனைத் தொடர்ந்து இன்று மதியம் முதல் மேற்கு தென்மேற்கு திசையில் மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் நகர்ந்து கரையை கடக்க கூடும் என சென்னை வானிலை மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஏறத்தாழ 40 இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது என்றுக் கூறிய அவர், அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 20 சென்டி மீட்டர் மழையும், காரைக்காலில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அடுத்து 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களான நீலகிரி , தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

பலத்த காற்றை பொறுத்தவரையில் தென் தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி மற்றும் ராமநாதபுரம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சமயங்களில் 90 கிலோமீட்டர் வேத்தில் வீசக்கூடும்.

ஆகவே, மீனவர்கள் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்குபெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளார்.