Tamilnadu

“ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கும் காவலர்கள்” : நடவடிக்கை எடுக்ககோரி உயர் அதிகாரிகளுக்கு DGP அதிரடி உத்தரவு!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுதபடை காவலர் வெங்கடேஷ் ஆன்லைன் சூதாட்டமான ரம்மி விளையாட்டில் பல ஆயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மேலும் பல காவலர்கள் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தமிழக டி.ஜி.பி திரிபாதி அனைத்து காவல் ஆணையர்களுக்கு மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், காவல் துறையில் பணியில் இருக்கும் காவலர்கள், குறிப்பாக ஆயுதப்படை காவலர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூதாட்ட விளையாட்டு அதிக லாபம் ஈட்டுவதற்காக சில விஷமிகளால் உருவாக்கப்பட்டது.

முதலில் பணத்தை ஈட்டுவது போது மாய பிம்பத்தை உருவாக்கி பிறகு சம்பாதித்த பணத்தை விட பல மடங்கு இழக்க நேரிடும். பணத்தை இழந்த காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளபடுகின்றனர்.

இதனால் அவர்களது குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்புக்குள்ளாகின்றது. எனவே காவலர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க கவாத்து மற்றும் வருகை பதிவின் போது காவலர்களுக்கு கண்காணிப்பாளர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் காவலர்கள் முதல் சிறப்பு காவலர்கள் வரை குறிப்பாக ஆயுதப்படை காவலர்கள் என அனைவருக்கும் அறிவுரை வழங்க வேண்டும் எனவும் நடவடிக்கை குறித்தான புகைப்படத்தை காவல் ஆணையர்கள் வருகிற 3ஆம் தேதிக்குள் டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Also Read: "2021ல் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!