Tamilnadu
மாணவர்களை ஏமாற்றிய அரசு: 7 அரசுப் பள்ளி மாணவிகளின் முழு மருத்துவ படிப்பு செலவையும் ஏற்ற தி.மு.க நிர்வாகி!
மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்த 7 அரசுப் பள்ளி மாணவியரின் ஐந்து வருட மருத்துவப் படிப்பிற்கான முழுப் பொறுப்பையும் தி.மு.க ஏற்றுள்ளது. தி.மு.க வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இச்செலவை ஏற்றுக்கொண்டார்.
அரசுப் பள்ளியில் பயின்று 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களின் கல்விச் செலவை தி.மு.க ஏற்கும் என அறிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து, அவசர அவசரமாக அரசே கட்டணத்தை ஏற்கும் என அறிவித்தது அ.தி.மு.க அரசு. அ.தி.மு.க அரசின் காலதாமதமான அறிவிப்பால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வாய்ப்பு கிடைத்தும் பலர் படிக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஏழை மாணவிகள் 7 பேரின் 5 ஆண்டு கல்விச் செலவை தி.மு.க வர்த்தகர் அணி மாநிலத் துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியன் ஏற்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அறிவித்தார். அப்போது கல்வி உதவிபெறும் 7 மாணவிகளும் உடனிருந்தனர்.
இதுகுறித்து தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செய்திட வலியுறுத்தி, போராட்டம் நடத்தியதன் விளைவாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் மருத்துவப் பட்டப்படிப்பு பயில இடம் கிடைத்தது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்த, டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை, ஏ.வெங்டேஷ்குமார் நினைவு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், தி.மு.க வர்த்தகர் அணி மாநிலத் துணைத் தலைவருமான எஸ்.அய்யாத்துரை பாண்டியன் மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்த 7 அரசுப் பள்ளி மாணவியர் ஐந்து வருட மருத்துவப் படிப்பிற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!