Tamilnadu

ரூ.137 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை கூறு போட்ட வருவாய் அதிகாரிகள்.. காஞ்சியில் மூவர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலூகாவுக்கு உட்பட்ட தாழம்பூரில் ரூ.137 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை விதிகளை மீறி முறைகேடாக 44 பேருக்கு பட்டா வழங்கியது தொடர்பாக வருவாய்த்துறையை சேர்ந்த 3 உயர் அதிகாரிகள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தாழம்பூரில் அரசுக்கு சொந்தமான அனாதீன நிலம் 102 ஏக்கர் இருந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.137 கோடியாகும். இந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அப்போது பணியாற்றிய நிலச்சீர்திருத்தங்கள் பிரிவு இணை ஆணையாளர் ஏ.பாலசுப்பிரமணி, உதவி ஆணையர் ஏ.பழனியம்மாள், கோட்டாட்சியர் டி.முத்துவடிவேலு ஆகியோர் இணைந்து 44 பேருக்கு பட்டா வழங்கியுள்ளனர்.

Also Read: ‘வேலியே பயிரை மேயலாமா?’: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் உட்பட பலர் கைது!

இவர்கள் 3 பேருக்கும் உபரி நிலங்களை மட்டுமே எடுக்க அதிகாரம் இருந்து வந்த நிலையில் கூட்டாக சேர்ந்து அரசு ஆவணங்களை திருத்தி முறைகேடாக 44 பேருக்கும் பட்டா வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனை கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலிஸார் கூட்டாக இணைந்து அரசு ஆவணங்களை திருத்தி முறைகேடாக பட்டா வழங்கியிருப்பதாக 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரில் முதலாவது குற்றவாளியான நிலச்சீர்திருத்தங்கள் பிரிவு இணை ஆணையர் ஏ.பாலசுப்பிரமணி காலமாகி விட்டார். 2 வது நபரான ஏ.பழனியம்மாள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொரு நபாரன டி.முத்து வடிேலு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியராகவும் பணியாற்றி வருகிறார்.

Also Read: லஞ்சம் வாங்கிக்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பிக்கொடுத்த அரசு ஊழியர் - புதுச்சேரியில் கைது!