Tamilnadu

மருத்துவ கல்விக்கட்டணம் : “தாமதமாக அறிவித்து நாடகமாடுவது ஏன்?” - எடப்பாடி அரசை சாடும் தங்கம் தென்னரசு!

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மருத்துவ மாணவர்களின் கல்வி கட்டணதை தமிழக அரசு செலுத்தும் என அறிவிப்பதில் தமிழக அரசிற்கு தாமதம் ஏன்? அமித்ஷா வருகைக்காக காத்திருந்தனரா? என தி.மு.க. எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என்ற அறிவிப்பு மாணவர் சமுதாயத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க கட்டணம் செலுத்தும் என்பது மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.கவை பின்தொடர்ந்தது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தமிழக அரசு வழங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ மாணவர் கட்டணம் குறித்து தி.மு.க அறிவித்த உடன் அவசர அவசரமாக அறிவித்து அ.தி.மு.க நாடகமாடுகிறது. தமிழக அரசு இந்த அறிவிப்பை கலந்தாய்வின் போதே அறிவித்திருக்கலாமே? தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசு செலுத்தும் என அறிவிப்பதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? அமித்ஷா வருகைக்காக காத்திருந்தார்? எனக் கேள்வி எழுப்பினார்.

‘செல்லக்கிளி புருசன் செவ்வாய்க்கிழமை செத்தானாம் வீடு வெறிச்சோடி இருக்கேனு வெள்ளிகிழமை அழுதாளாம்’ எனும் கதையாக இருப்பதாக விமர்சித்துள்ளார். தமிழக அரசு 7.5% இடஒதுக்கீடு அளித்தது குறைவு. இட ஒதுக்கீடு 10% அளித்திருக்க வேண்டும். இதனால் கூடுதலாக 100 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பார்கள் எனத் தெரிவித்தார்.

Also Read: “தமிழகத்தில் ‘பீகார் மாடல்’ தேர்தலா? இது கொரோனாவை விட கொடுமையானது” - மு.க.ஸ்டாலின் சரமாரி தாக்கு!

தொடர்ந்து பேசிய அவர் மு.க.ஸ்டாலினின் அழுத்தத்தினால்தான் 7.5% இட ஒதுக்கீடு சாத்தியமானது. இதனால் 317 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர சாத்தியமாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்விபயம் வந்துவிட்டது. பா.ஜ.க தலைவரை (அமித்ஷாவை) வரவேற்க அ.தி.மு.கவினர் கொடியுடன் திரண்டு சென்றுள்ளனர். இதிலிருந்து பா.ஜ.கவின் இன்னொரு வடிவம்தான் அ.தி.மு.க எனத் தெளிவாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை தடுக்க தடுக்க நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அவருடைய பிரச்சாரம் வளர்ந்து வருகிறது. செல்லும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். 2021ல் நிச்சயம் தி.மு.க ஆட் சி அமைக்கும். நீட் சமூகநீதிக்கு எதிரானது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

தலைவர் கலைஞரை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் தி.மு.கவில் உள்ளனர். தனிமரம் தோப்பாகாது. பா.ஜ.கவிற்கு சென்ற ராமலிங்கம் ஒரு தனிமரம். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம் மிகப்பெரிய தாக்கத்தையும் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தும். அமித்ஷாவின் வருகை எதிர்கட்சியினரிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தங்கம் தென்னரசு கூறினார்.

Also Read: தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும்!