Tamilnadu
“தி.மு.க தலைவர் அறிவித்தபிறகு அறிவிக்கும் முதல்வர்.. இந்த எண்ணம் முதலில் வரவில்லையே?”- துரைமுருகன் சாடல்!
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்னர்தான் முதல்வர் அறிவிக்கிறார். சிறிய விஷயத்தை கூட தி.மு.க சொல்லித்தான் அரசு செய்கிறது என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அ.தி.மு.க அரசை சாடியுள்ளார்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வேலூர் காந்தி நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தி.மு.க தலைவர் அவர்கள், 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்த அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் தி.மு.க ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.
ஒரு அரசு தான் இப்படிப்பட்ட நலிந்த மாணவர்களுக்கு முன்வந்து உதவ வேண்டும். ஆனால் இந்த அரசு அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஏழை எளிய பாட்டாளி மக்களின் தோழனாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், இன்று ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையை எதிர்க்கட்சியாக இருந்து செய்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்னர்தான் முதல்வர் அறிவிக்கிறார். சிறிய விஷயத்தை கூட தி.மு.க சொல்லித்தான் அரசு செய்கிறது. இந்த எண்ணம் முதலிலேயே வந்திருக்க வேண்டாமா?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இட இதுக்கீடு பெற முழு முயற்சி எடுத்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அரசோ 7.5% என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரிடம் கையெழுத்துக்காக அனுப்பியது. தி.மு.க சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதன் விளைவாக 7.5% ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் கையெழுத்திட்டார்.
தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலினை கைது செய்யாமல் விட்டிருந்தால் அவர் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றிருப்பார். ஆனால் இந்த அரசு தி.மு.கவின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை கைது செய்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக் கூட்டங்களிலும் விழாக்களிலும் கூட்டம் அலைமோதியது என்று பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். தமிழக அமைச்சர்கள் நடத்தும் கூட்டங்களில் கூட பொதுமக்கள் அதிகமாக கூடுகின்றனர்.
அங்கெல்லாம் கொரோனா பரவாது. ஆனால் தி.மு.க நடத்தும் கூட்டங்களில் மற்றும் கொரோனா பரவும் என்று அ.தி.மு.க அரசு வேண்டுமென்றே கைது நடவடிக்கை எடுக்கிறது. எது எப்படியோ உதயநிதி ஸ்டாலின் நடத்தும் தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று தமிழகம் முழுவதும் பெரிய விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!