Tamilnadu

“எல்லோருக்கும் ஒரே சட்டம் தான்; அரியலூர் வரும் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்”: தி.மு.கவினர் ஆவேசம்!

அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட இளைஞரணி கழக அமைப்பாளர் தெய்வ. இளைய ராஜன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதேப்போல், ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலையில் கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலிலும் தா.பழூர் பகுதிகள் கழக ஒன்றிய செயலாளர் கா.சொ. கண்ணன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திலும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இதுகுறித்து அரியலூர் மாவட்ட கழக இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜான் கூறுகையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா ஆய்வு என்ற பெயரில் கட்சி பணிகளை கூட்டம் கூட்டமாக கூடி விளம்பரம் செய்து வருகிறார்.

அப்பொழுது ஏற்படாத தொற்று தற்பொழுது கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் எழுச்சி மிகுதி காரணமாக ஆளுகின்ற அரசு கைது நடவடிக்கை எடுத்துள்ளது. வருகின்ற 26ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தற்பொழுது தி.மு.கவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர், தமிழக முதலமைச்சர் வருகையின் போதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வருகின்ற முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து கழகத்தின் அறிவுறுத்தலின்படி போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானபோது ஏன் முதல்வருக்கு மட்டும் விதிவிலக்கு என தி.மு.கவினர் கேள்வி எழுப்பினர்.

Also Read: “தி.மு.க பரப்புரையை முடக்க அ.தி.மு.க சதி” - திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் கைது!