Tamilnadu
விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குழந்தைகளின் படிப்பு செலவை முழுவதுமாக தி.மு.க ஏற்கும் : கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு திருமணமாகி தமயந்தி என்ற மனைவியும், கன்னிகா வயது 7, வைஷ்ணவி வயது 4, பிரதீப் குமார் வயசு 1 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றி வந்த கருப்பசாமி காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் பணியிலிருந்த போது அப்பகுதியில் பனி மலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்திற்கு ராணுவ அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கருப்பசாமியின் குடும்பத்தினர் மற்றும் திட்டங்குளம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடலை விரைந்து சொந்த ஊரான கோவில்பட்டிக்கு கொண்டு வர வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி திட்டக்குளத்திற்கு நேரில் சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் ராணுவ வீரர் கருப்பசாமியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து குடும்பத்தினரிடம் தி.மு.க சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்.பி, “ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து விதமான உதவிகளும் தி.மு.க சார்பில் செய்யப்படும். அதுமட்டுமன்றி கருப்பசாமியின் குழந்தைகள் மூன்று பேரும் படிப்பு செலவையும் முழுவதுமாக தி.மு.க ஏற்றுக் கொள்ளும்” தெரிவித்தார்.
அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் முருகேசன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யா உள்ளிட்ட ஏராளமான தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!