Tamilnadu

கேன்சரால் அவதியுற்ற மனைவியுடன் கணவன் தற்கொலை.. முதிய தம்பதியின் சோக முடிவால் திருச்சி அருகே பரபரப்பு!

திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி 2வது தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (70). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், தனது மனைவி சுமதியுடன் (64) வசித்துவந்தார்.

இந்த நிலையில் இருவரும் நேற்று இரவு பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளனர். இன்று காலை நேரமாகியும் கணவன் மனைவி வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.

இவர்களது மகன் பாலாஜி கதவை தட்டிபார்த்துவிட்டு, பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, மோகன்தாஸ் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி சுமதி மரணமடைந்த நிலையிலும் சடலமாக கிடந்துள்ளனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது தெரியவந்தது. மேலும், சுமதி அனுபவிக்கும் வேதனையை பார்த்து சகிக்க முடியாததால் இருவரும் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

உயிர் துறப்பதற்கு முன்னதாக தங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. மனைவியை இழந்த பின்பு இந்த பூமியில் வாழ்வதற்கு நான் விரும்பவில்லை. எங்களுடைய மகன் மருமகள், பேத்தி ஆகியோரை பிரிந்து செல்வது கவலையளிக்கிறது. அவர்கள் எங்களை காப்பாற்ற நிறைய செலவு செய்தனர் என கடிதம் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலிஸார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Also Read: “பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி” : கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் !