Tamilnadu

மக்களே உஷார்.. பெண்களின் புகைப்படத்தை வைத்து போலி முகநூலில் பண மோசடி : 6 பேர் கைது !

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி மேட்டுதெருவை சேர்ந்தவர் சுகுமார் இவரது மகள் பிரியா (எ) பிரியதர்ஷினி அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது வீட்டருகே வசித்து வரும் அய்யப்பன் மற்றும் அவரது மனைவி அனுசியா இருவரும் பிரியதர்ஷினியின் போட்டோவை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து வெளிநாட்டில் வேலை பார்த்த திருச்சியை சேர்ந்த மருதுபாண்டியன், அனுசியாவுடன் முகநூலில் பேசிவந்த நிலையில், அனுசியா கொஞ்சம் கொஞ்மாக ரூ.2 லட்சம் வெஸ்டர்ன் மணி மூலம் மருதுபாண்டியனிடம் பணம் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தவர் பேஸ்புக்கில் அனுசியாவுடன் பேசிய போது, நேரில் பார்க்க வேண்டும் தெரிவித்துள்ளார். ஆனால் சந்திக்க மறுத்த நிலையில், கடந்த மாதம் 30-ந் தேதி, பாமணிக்கு வந்து அனுசியா வீட்டை தேடியபோது அவரது உறவினர்கள் அனுசியா வீட்டை காண்பித்தனர்.

அனுசியாவை பார்த்தவர் இவர் இல்லை என்று அங்கிருந்தவர்களிடம் பேஸ்புக் போட்டோவை காண்பித்து கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி வீட்டை காண்பித்தனர். அவர்களிடம் சென்று கேட்டபோதுதான் பிரியதர்ஷினிக்கு தனது போட்டோவை முகநூலில் பதிவிட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து பிரியதர்ஷினியின் தாய் சுதா திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் புஷ்பவள்ளி தலைமையில் போலிஸார் அனுசியா, அவரது கணவர் அய்யப்பன், அனுசியாவின் தம்பி கவிதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பண மோசடிக்கு உடந்தையாக இருந்த அனுசியாவின் தந்தை ரவி, தாய் மீனா , உறவினர் சங்கீதா ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Also Read: “உயரதிகாரி என ஏமாற்றி ஊர்சுற்றும் மோசடி பேர்வழி” - மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்டபோது கைது!