Tamilnadu

மாநில உரிமையை பறித்து நீட் தேர்விலிருந்து மத்திய அரசு நிறுவனங்களுக்கு விலக்கு- டாக்டர்கள் சங்கம் கண்டனம்!

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான, நூறு விழுக்காடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையை மீண்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என்றும், அகில இந்தியத் தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் பேசியுள்ளார்.

அதில், “மத்திய அரசு, மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருகிறது. மக்களின் மருத்துவத் தேவைகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அகில இந்திய தொகுப்பு முறையை ( All India Quota System) ரத்து செய்ய வேண்டும். முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கும், உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு தர வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்ற அடிப்படையில், INI CET நுழைவுத் தேர்வு AIMS, JIPMER, PGI CHANDHIGAR போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கு நவம்பர் முதல் தனியாக நடத்தப்பட உள்ளன. நீட் தேர்விலிருந்து மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் மீண்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் நீட்டிலிருந்து மீண்டும் விலக்கு அளிக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு விலக்களிக்க மறுப்பது, மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.

இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வை காண, தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக எடுத்திட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும். பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்திட வேண்டும்.

Also Read: கொரோனா வார்டில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவர் ‘மர்ம’ மரணம் : பணிச்சுமை தாளாமல் தற்கொலையா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்களுக்கும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் இறந்த அனைத்து பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் குடும்பங்களுக்கும் ரூ. 50 லட்சம் நிவாரணமும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை வழங்கிட வேண்டும்.

கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை வழங்கல் பணிக்காக தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். யாரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.

Also Read: “முறைகேடில்லாமல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துக” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!