Tamilnadu

“பெண்களை ஆபாசமாக காண்பிக்கும் விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை” : ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு !

ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினைகள் தொடர்பான மருந்துகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் மிகவும் ஆபாசமாகவும் வளர் இளம் பருவத்தினரை தூண்டும் விதமாகவும் அமைகின்றன.

விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எவ்வித தணிக்கையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதோடு வளர் இளம் பருவத்தினர் குற்றவாளிகளாக உருவாகும் சூழல் உள்ளது.

கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள் மட்டுமின்றி உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் போன்றவற்றுக்கும் தேவையற்ற வகையில் பெண்களை ஆபாசமாக காண்பித்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

ஆகவே விளம்பரங்களை தணிக்கைக்கு உட்படுத்தவும், மீறும் ஊடகங்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு, ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் இது குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “தியாகிகள் பென்ஷன் கோரிய வழக்கில் நவ.26 தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்”: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!