Tamilnadu

“தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க மறுக்கும் தமிழக அரசு”: அ.தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டம்!

தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை உருவாக்கி அதில் தாயகம் திரும்பிய தமிழர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களை வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.

மேலும் அவர்கள் வசிக்க குடியிருப்புகள், குழந்தைகள் கல்வி கற்க பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்த கலைஞர் ஆட்சியில், தோட்டத் தொழிலாளர்கள் கேட்காமலேயே 20 சதவீத போனஸ் தீபாவளி பண்டிகைக்கு வழங்கி வந்தார்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அ.தி.மு.க ஆட்சியில், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் கூட வழங்கப்படாத நிலையில், கொரோனா ஊரடங்கு காலங்களில் கூட தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.

ஆனால், அவர்களுக்கு இதுவரை போனஸ் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்படாததால் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தோட்ட தொழிலாளர்கள் இன்று பந்தலூர் , கூடலூர் போன்ற பகுதிகளில் 30 இடங்களில் 20% போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் போது, உடனடியாக இன்று போனஸ் வழங்காவிட்டால் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதகை வரும்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் செய்யப்போவதாக தோட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

Also Read: 8,000 சம்பளம்..15 மணி நேர வேலை..தேயிலை தோட்ட பணியாளர்களுக்காக குரல் கொடுத்த தி.மு.க எம்.பி