Tamilnadu

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

கொரோனா தொற்று காரணமாக அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிசிக்கை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு மரணம் அடைந்தார்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், “மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந் துயருற்றேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க.வில் மூன்று முறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று - 2016-ல் வேளாண்துறை அமைச்சராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் அமைச்சரவையில் பதவியேற்றவர் துரைக்கண்ணு.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதும் - துறை சார்ந்த மானியங்களில் பதிலுரையாற்றுகின்ற போதும், அவை மரபுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைச்சராவார். அவரது மறைவு அ.தி.மு.க.விற்கும் - சக அமைச்சரவை சகாக்களுக்கும் பேரிழப்பாகும்.

பொதுவாழ்வில் உள்ள அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். இப்போதும் அதையே வலியுறுத்தி - தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும், சுய பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு அமைச்சர் துரைக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - சக அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவ்வித்துள்ளார்.