Tamilnadu

யானை தாக்கி உயிரிழந்த பாகனின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய தி.மு.க எம்.எல்.ஏ!

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த 2015ம் ஆண்டு அசாமிலிருந்து தெய்வானை என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது. 14 வயதுடைய அந்த யானையை காளிதாஸ் என்ற யானை பாகன் வளர்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மே 24ம் தேதி அந்த யானையை வழக்கம் போல குளிப்பாட்ட காளிதாஸ் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று காளிதாஸை யானை பலமாக தாக்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த காளிதாஸை உடன் பணியாற்றிய கோவில் ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் படுகாயமடைந்த காளிதாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில், கொரோனா ஊரடங்கினால் கடந்த 60 நாட்களாக யானை வெளியே செல்லாமல் இருந்ததும் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.

இதனையடுத்து உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதற்கும், டிப்ளமோ நர்சிங் படித்துள்ள காளிதாஸின் மனைவிக்கு அரசு வேலை வழங்குவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, காளிதாஸின் குடும்பத்தினருக்கு டாக்டர்.பா.சரவணன் எம்.எல்.ஏ., இன்று தனது சொந்த பணத்திலிருந்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் கோவிலில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கு வேலை வழங்குவதற்கும் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தி.மு.க எம்.எல்.ஏ சரவணனின் இந்த செயலுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: IAS தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பெண்ணின் கண் பார்வைக்கு உதவும் தி.மு.க MLA சரவணன் !