Tamilnadu
யானை விரட்டும் குழுவிற்கு 10 மாத சம்பள தொகை நிலுவை : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது குற்றச்சாட்டு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புலி மற்றும் யானை தாக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் வன குற்றங்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் வன குற்றங்களை தடுப்பதற்காகவும், யானை - மனித மோதலை தடுக்கும் பணி உள்ளிட்ட பணிகளில் வன ஊழியர்கள் தவிர தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை விரட்டும் குழு காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இதில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாதம் 12 ஆயிரத்து 500 ரூபாயும், யானை விரட்டும் காவலர்களுக்கு 6,750 ரூபாயும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்தநிலையில் யானை விரட்டும் குழு காவலர்களுக்கு ஜூன் மாதம் முதல் தமிழக அரசு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் பலமுறை யானை விரட்டும் குழுவினர் மனு அளித்தும் இதுவரை அவர்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
24 மணி நேரமும் கிராமப்பகுதிகளில் யானை விரட்டும் பணியை மேற்கொள்ளும் யானை விரட்டும் குழுவினருக்குச் சம்பளம் வழங்கப்படாததால் குடும்பச் செலவைச் சமாளிக்க சிரமப்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் யானை விரட்டும் குழுவினர் , இதுகுறித்து பேசினால் தங்களை வேலையை விட்டு நீக்கி விடுவதாக வனத்துறை அதிகாரிகள் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த ஆண்டு 2017 -18 ஆம் நிதியாண்டில் நிலுவையிலுள்ள 6 மாத சம்பளமும் வரவில்லை என்று குமுறும் யானை விரட்டும் குழுவினர் தீபாவளிக்கு முன்பு பத்து மாத நிலுவை சம்பளத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைப் பகுதியான நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை யானை விரட்டும் பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்தப் பகுதியில் யானைகளால் நடக்கும் அசம்பாவிதங்களின் எண்ணிக்கையும் அதிகமே. இந்தநிலையில் யானை விரட்டும் தொழிலாளர்களுக்குக் கடந்த 10 மாதமாக சம்பள தொகையைக் கொடுக்காமல் இருப்பது வனத்துறை மற்றும் அரசின் அலட்சியதையே காட்டுகிறது.
Also Read
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
-
2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!
-
“நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !