Tamilnadu

“ஜி.எஸ்.டி இழப்பீடு கிடையாது” : மாநிலங்களுக்கு பட்டை நாமம் போடும் மத்திய அரசு - கடனில் மூழ்கும் தமிழகம்!

தமிழக அரசுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு மூலம் பட்டை நாமம் போட்டுள்ளது மத்திய அரசு. மத்திய அரசு மாநில அரசுகளை கடன் வாங்கி கொள்ளலாம் என்றதற்கு தலையாட்டி பொம்மை போல் மீண்டும் கடன் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது தமிழக அரசு.

சினிமாவில் இடம்பெற்ற நகைச்சுவை வசனமான, “வரும்... ஆனா வராது” என்பது போலவே கடைசியில் நகைச்சுவை பொருளாக மாறிவிட்டது ஜி.எஸ்.டி வரி இழப்பீடு. ரூபாய் 1லட்சம்.. 2 லட்சம் அல்ல 12,000 கோடி ரூபாய் வரி இழப்பீடு தொகையை தமிழகத்திற்கு தராமல் மத்திய அரசு இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறது.

2017-ல் இருந்து இன்று வரை ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்கக் கோரி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறோம் என ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் சொல்லிக்கொண்டே இருந்தாரே தவிர, ஒரு பைசா கூட தமிழகத்திற்கு இன்று வரை வர வில்லை.

தற்போது கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையில் ரூ2.35 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து மாநில அரசுகளும் ரிசர்வ் வங்கி அல்லது வெளிசந்தையில் இருந்து கடன் வாங்குமாறு மத்திய அரசு கூறியது.

ஏற்கனவே, தமிழகத்தின் மொத்த கடன் 5 லட்சம் கோடி; நடப்பாண்டு நிதி பற்றாக்குறை மட்டும் 85,000 கோடி; கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து துறைகளிலும், பொருளாதாரத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், 12,000 கோடியை ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை வாங்காமல், மத்திய அரசு முன்வைத்த கடன் வாங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்கள் இதுவரை மத்திய அரசின் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில், பா.ஜ.கவின் கைப்பாவையான எடப்பாடி அரசு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் மூழ்கி உள்ள நிலையில், மீண்டும் கடன் பெற்றால், வரும் காலத்தில் தமிழகத்தின் கஜானாவை தேடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்கின்றனர் பொருளதார நிபுணர்கள்.

Also Read: “கூலிப்படையை ஏவி கொன்று விடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டுகிறார்” : அ.தி.மு.க MLA குற்றச்சாட்டு!