Tamilnadu

பிற்படுத்தப்பட்டோர் உரிமையைப் ‘‘பந்தாடுவது’’ நியாயமல்ல.. OBC இடஒதுக்கீடு வழங்குவதில் என்ன தயக்கம்?

பிற்படுத்தப்பட்டோர் உரிமையைப் ‘பந்தாடுவது’ நியாயமல்ல - இவ்வாண்டே செயல்படுத்துவது மிகவும் அவசர, அவசியமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “மத்தியத் தொகுப்புக்கு மருத்துவக் கல்விக்கான மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் பட்டப் படிப்பிற்கும், பட்ட மேற்படிப்புக்கும் கொடுக்கும் இடங்களில் ஓபிசி என்ற பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு சட்டப்படி ஒதுக்கிட வேண்டிய இட ஒதுக்கீட்டினை மத்திய அரசும், அதன் சுகாதாரத் துறையும் தராமல் மறுப்பது சமூகநீதிக்கு விரோதம் என்று திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், ம.தி.மு.க., காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(சி.பி.அய்.), இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.), விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியும் வழக்குத் தொடர்ந்தன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், தமிழ்நாடு அரசும்கூட இந்தப் பிரச்சினையில், இதே நிலைப்பாட்டினை வலியுறுத்தி, வழக்கு தொடர்ந்தது.

மூன்று மாதத்திற்குள் ஒரு கமிட்டி போட்டு...

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் வழங்கிய தீர்ப்பில், மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள 69 சதவிகிதப்படி பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்படவேண்டும்; மூன்று மாதத்திற்குள் ஒரு கமிட்டி போட்டு, அக்கமிட்டியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளரும் இடம்பெற்று, மத்திய அரசின் பிரதிநிதி, மத்திய சுகாதாரத் துறை பிரதிநிதி ஆகியோர் முடிவு செய்து தரவேண்டும் என்றார்.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசு சார்பாக இவ்வாண்டே அதனைத் தரவேண்டும் என்பதாக ஓர் தனி வழக்கினையும், இதன் தொடர்பாகப் போட்டனர்; தி.மு.க. இவ்வழக்கில் ‘கேவியட்’ மனுவும் போட்டிருந்தது.

டி.ஆர்.பாலு எம்.பி., நாடாளுமன்றத்தில் கேள்வி!

நாடாளுமன்றத்தின் தி.மு.க. தலைவர் நண்பர் டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள், இது சம்பந்தமாக ஏன் மருத்துவக் கல்வித் துறையில் தாமதம் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு நேற்று (13.10.2020) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 69 சதவிகிதப்படி, 50 சதவிகித பிற்படுத்தப்பட்டவருக்கான புள்ளி விவரங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பற்றி குழு கேட்டு, அக்குழு 22.9.2020 கலந்தாலோசித்து, அது 2021-க்காக மட்டுமே என்று அந்தக் கலந்தாய்வில் கூறப்பட்டது. இப்படி ‘சாக்கு போக்கு’ கூறிய நிலையில், மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது.

Also Read: பாஜகவுடனான கூட்டணிக்காக எதையும் விட்டுக்கொடுத்து பலிபீடம் ஏற்ற அதிமுக தயாராகிவிட்டது -மு.க.ஸ்டாலின் சாடல்

27 சதவிகிதத்தை அளிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லையே..

கேவியட் மனுமூலம் தன்னை இணைத்துக் கொண்ட தி.மு.க. வழக்குரைஞர் வில்சன் எம்.பி., ‘‘வரும் 16.10.2020 தேதியில் ‘நீட்’ தேர்வு முடிவை வெளிட இருப்பதால், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவிகிதம் கொடுப்பதுபோல, இவ்வழக்கிற்கு எந்தவித பாதகமில்லாமல் (without prejudice to the case and committee’s decision for this year alone) கமிட்டி முடிவிற்குக் குந்தகமில்லாமல், குறைந்தது 27 சதவிகித இட ஒதுக்கீடு மத்திய அரசால் வழங்கப்படலாம். இது ஒரு தற்காலிக ஏற்பாடாக ஏற்றுக்கொண்டு, இந்தக் கல்வியாண்டே இட ஒதுக்கீடு தரவேண்டும்‘’ என்று வாதிட்டார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘‘இது சரியான நல்ல யோசனைதான்- மத்திய அரசின் பதிலைக் கேட்டுக் கூறுமாறு’’ மத்திய அரசின் கூடுதல் வழக்குரைஞர் (ASG) இடம் தெரிவித்துள்ளனர்!

பொறுத்திருந்து பார்ப்போம்!

அரசமைப்புச் சட்டப்படியும், உயர்நீதிமன்றத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ள தீர்ப்பின்படியும் அளிக்கவேண்டிய இடங்களைத் தராது, இப்படி ஏனோ தானோவென்று - நாடாளுமன்றத்தின் இத்தனை உறுதி மொழிக்குப் பிறகும் - தாமதிக்கப்படுகிறது. மீண்டும் வழக்கு 15.10.2020 அன்று விசாரிக்கப்பட உள்ளது. என்ன முடிவு வருகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவப் படிப்பு உரிமைகள் இப்படி பந்தாடப்படுவது விசித்திரமாகவும், வேதனையாகவும் உள்ளது!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: OBC இடஒதுக்கீடு: மத்திய குழுவிடம் ஏன் வலியுறுத்தவில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு? -தமிழக அரசுக்கு கண்டனம்