Tamilnadu

உயிரோடு இருந்த அண்ணனை இறந்ததாக கூறி குளிர்சாதன பெட்டியில் வைத்த தம்பி: சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்ட சந்தபட்டியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். இவர், சகோதரர் சரவணன் மற்றும் சகோதரியின் மகள்கள் கீதா, ஜெய ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக பாலசுப்ரமணிய குமார் உடல் நிலை, பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பாலசுப்ரமணிய குமார் இறந்துவிட்டதாக குளிர்சாதன பெட்டிக்கு அவருடை சகோதரன் சரவணன் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குளிர்சாதனப் பெட்டி பணியாளர்கள் சம்மந்தப்பட்ட சரவணனின் வீட்டிற்குச் சென்று குளிர்சாதனப் பெட்டியை வைத்து விட்டு சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் குளிர்சாதன பெட்டியை பார்க்க பணியார்கள் வந்த போது, அதில் இருந்த முதியவர் பாலசுப்ரமணிய குமார் அசைவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து தங்களின் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

குளிர்சாதனப் பெட்டி உரிமையாளர் முதியவர் உயிரோடு இருப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டுச் செல்லவில்லை; அதனால் தான் உயிர் பிரியும் வரை உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளோம்.

இன்னும் சற்று நேரத்தில் இறந்துவிடுவார் என்று கூறி, அவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் போலிஸாருக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்தில் வந்த போலிஸார் குளர்சாதனப் பெட்டியில் இருந்த முதியவர், பாலசுப்ரமணிய குமார் மீட்டு, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், முதியவரை இறந்ததாகக் கூறி உயிரோடு குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அவரது சகோதரர் சரவணன் மீது சூரமங்கலம் காவல்துறையினர் உயிருக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடிய செயலை செய்வது மற்றும் அஜாக்கிரதையாக கையாலுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Also Read: பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய 4 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: கர்நாடகாவில் நடந்த கொடூரம்!