Tamilnadu

ஆன்லைன் வகுப்பில் கற்க வழியற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பெண் ஊராட்சி மன்ற தலைவர்!

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவுவதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடியுள்ளன. இதனால் பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கிராமப்புற பகுதிகளில் இணைய வேக குறைபாடு உள்ளிட்ட காரணங்களால், ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பாடம் கற்பது சிரமமாக உள்ளது.

இந்த கொரோனா காலத்தில் கிராமப்புற மாணவர்கள் ஆண்ட்ராய்டு கைபேசி, மடிக்கணினி பயன்படுத்த வசதியின்றி தவிப்பதால் கற்றலில் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஊராட்சித் தலைவராக நிலவழகி பொய்யாமொழி இருக்கிறார். இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் தான் படித்த பள்ளியில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கொரோனா காலத்தில் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தனது வீட்டிலேயே சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து மேல்வில்வராயநல்லூர் ஊராட்சித் மன்ற தலைவர் நிலவழகி பொய்யாமொழி கூறுகையில், “ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் கிராமத்திற்கு அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் செய்யவேண்டும் என்று சபதம் ஏற்றேன். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாகப் பள்ளிகள், கல்லூரிகள் திறக்காமல் உள்ளது. நான் படித்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு என்னுடைய வீட்டிலேயே சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறேன். இந்த மாணவர்கள் அனைவரும் பொறுப்புடனும் ஆர்வத்துடனும் இங்கு வந்து கல்வி கற்று வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவரே கிராமப்புற மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் சம்பவம் அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Also Read: 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு - பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் உ.பி அரசால் தொடரும் குற்றங்கள்!