Tamilnadu
வீட்டை காலி செய்யச் சொன்னதால் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் - ஒருவர் பரிதாப பலி!
தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு காட்டன் ரோட்டில், நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டில் 20 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் நடராஜன் என்பவரின் மகன் அண்ணாமலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டூவீலர் ஒர்க்-ஷாப் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அந்த காம்பவுண்டில் குடியிருந்த மரியஅந்தோணி தினேஷ் மென்டிஸ் (46) என்பவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து அங்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்னால் வீட்டை காலி செய்ய வைத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த அவர் நேற்று இரவு 11 மணியளவில் குடிபோதையில் அங்கு வந்து தகராறு செய்துள்ளார்.
மேலும் காம்பவுண்டிற்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்துள்ளார். இதில் 9 பைக்குகள் மளமளவென தீப்பற்றி எரிந்துள்ளன. மேலும் அண்ணாமலை வீட்டிற்குள்ளும் தீ பரவியது. தூங்கிக் கொண்டிருந்த அண்ணாமலை பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தீ விபத்தில் அண்ணாமலையின் மகன் நித்தின் (8) காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடியில் உறங்கியதால் அண்ணாமலையின் மனைவி கங்கா தேவி மற்றும் மற்றொரு மகன் நிகில் (6) ஆகியோர் உயிர்தப்பினர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சங்கர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இது தொடர்பாக தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், மரியஅந்தோணி தினேஷ் மென்டிஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தலைமறைவாக உள்ள மரியஅந்தோணி தினேஷை போலிஸார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!
-
பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!
-
பாஜக அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOutதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!