Tamilnadu

தியானம் செய்ய வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெருகவாழ்ந்தான் பகுதியில், 16 வயது சிறுமியை ஐயப்பன் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதைத் தொடர்ந்து, அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டியார்பட்டியில், கனரக வாகன ஓட்டுநரான கதிர் வேல்சாமி (50) அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை ஏற்று போலிஸார் விசாரணை நடத்தி முதியவர் கதிர் வேல்சாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம், சென்னையில் உள்ள போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்த கோயில் அர்ச்சகர் ஒருவர், 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சென்னை போரூர் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமவுலி. 50 வயதான சந்திரமவுலி அதேப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில், அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோயில் வருபவர்களுக்கு தியானம் சொல்லிக்கொடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில், இவர் மீது காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் காதலித்தவரை மறக்கவேண்டும் என அடிக்கடி கோயிலுக்குச் செல்வேன். அப்போது கோயில் அரச்சகராக இருக்கும் சந்திரமவு என்னிடம் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, என்னுடைய காதலை மறக்கவேண்டும்; அதற்கு என்ன செய்யவேண்டும் என்று சந்திரமவுலியிடம் கேட்டேன். அதற்கு அவர் தியானம் செய்தால் மறந்துவிடலாம் எனக் கூறி, என்னை தனி அறைக்கு ஒன்று அழைத்துச் சென்றார்.

அங்கே சென்றதும் தியானம் செய்யும்படி கூறினார். தியானத்தில் இருந்த போது அவர் என்னிடம் சில்மிஷம் செய்தார். எனவே எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த அரச்சகர் சந்திரமவுலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அவரின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலிஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கோயில் அர்ச்சகர் சந்திரமவுலியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: தமிழகத்தில் இரு வேறு இடங்களில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோ சட்டத்தின் கீழ் 2 பேர் கைது!