Tamilnadu

தமிழகத்தில் இரு வேறு இடங்களில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோ சட்டத்தின் கீழ் 2 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெருகவாழ்ந்தான் திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் ஐயப்பன் (28) அந்த ஊரில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி அருகே ஆலங்காடு பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட முத்துப்பேட்டை போலிஸார் 16 வயது சிறுமியை ஐயப்பன் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து ஐயப்பன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டியார்பட்டியிலும் நடந்துள்ளது.

கனரக வாகன ஓட்டுநரான கதிர் வேல்சாமி (50) அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தநிலையில் போலிஸார் விசாரணை நடத்தி முதியவர் கதிர் வேல்சாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திண்டுக்கலில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கொலை : நீதி கோரி சலூன் கடைகள் மூடி போராட்டம்!