Tamilnadu

நடப்பாண்டில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாகும் - சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாகக் காணப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:

தற்போது ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து வரும் அக்.9-ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

எனவே இது அடுத்த 2 நாட்களில் வட மேற்கு திசையில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் வரும் அக்டோபர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் 2 மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார். மேலும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவினால் தமிழகத்தில் மழை குறைந்துவிடும்.

தமிழகத்தில் வழக்கமாக, அக்டோபர் மாதத்தில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். ஆனால் நேற்று மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்துள்ளது.

இந்த மாற்றம் காரணமாகவும், வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி காற்று வீசுவது வலுவாக இருப்பதாலும், வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதாலும் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவது தாமதமாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.