Tamilnadu

“நீதி கேட்டு பேரணி நடத்தியோர் மீது வழக்குப் பதிவு செய்து ஜனநாயகத்தின் குரள்வளையை நெரிப்பதா?” - கி.வீரமணி

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்ற தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்ட 191 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோய் பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்தச் செயலுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் பாலியல் கொடுமைகளைக் கண்டித்து பேரணியாகச் சென்ற கனிமொழி எம்.பி. மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஆசிரியர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் சடலத்தைக்கூட அவரது பெற்றோர்களுக்குக்கூட காட்டாமல் நடுநிசியில் பெட்ரோல் ஊற்றி வயல்வெளியில் உத்தரப்பிரதேச காவல்துறை எரித்தது.

பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்களை உத்தர பிரதேசக் காவலர்கள் மிக மோசமாக, கீழே தள்ளியும், காங்கிரஸ் தொண்டர்களைத் தடியில் அடித்தும், அடுத்த நாள் சென்ற மேற்கு வங்க எம்.பி.க்களிடமும் ஆண் - பெண் என்ற வேறுபாடு, நாகரிகம் பார்க்காமல் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டனர்.

இதனைக் கண்டித்து, நேற்று (அக். 5) மாலை கிண்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாகச் சென்ற தி.மு.க எம்.பி.யும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழியையும் உடன் சென்ற பொறுப்பாளர்களையும் கைது செய்து, ஆளுநரிடம் அந்த மனுவைக் கூட கொடுக்க தமிழக அரசு அனுமதிக்காததும், அவரைக் கைது செய்ததும் மிகவும் வன்மையாக கண்டனத்திற்கும் உரியதாகும். அவர்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

உத்தர பிரதேச அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதைக் கண்டித்து, நீதி கேட்டு ஆளுநரிடம் மகளிர் பேரணி நடத்துவதைத் தடுத்து கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “உ.பி. கொடூரத்துக்கு கொஞ்சமும் குறையாத செயல் இது” - கனிமொழி MP கைது குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்!