Tamilnadu

அரசு பேருந்துக்கு சுங்கவரி கட்ட நிர்பந்தித்த ஊழியர்கள்.. தலா ரூ.10 கொடுத்து வரியை கட்டிய பயணிகள் !

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து செங்கல்பட்டு வழியாக சென்றுகொண்டிருந்தபோது செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் சுங்கவரி கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் நிர்பந்தித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் இது அரசு பேருந்து இதற்கு சுங்கவரி வசூலிக்க தேவையில்லை என்று கூறியும் பேருந்துக்கு சுங்கவரி கட்டாமல் செல்லக்கூடாது என கூறி அங்கிருந்து பேருந்து செல்ல முடியாத அளவிற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்திருக்கிறார்கள்.

இதனால் வெகு நேரம் ஆகியும் பேருந்து சுங்கச்சாவடியிலேயே இருப்பதால் பயணிகள் என்னவென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது, அரசு பேருந்துக்கு சுங்கவரி கேட்டதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் அதிகாரிகள் செல்லாமல் சுங்கவரி கட்டமுடியாது என்று கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து பயணிகள் ஒன்றிணைந்து தலா 10 ரூபாய் கொடுத்து 150 ரூபாய் சேகரித்து சுங்கவரியை பயணி ஒருவர் கட்ட சென்றபோது சுங்கச்சாவடி ஊழியர் ஓட்டுநர்தான் கட்ட வேண்டும் என்று கூறியதால் ஓட்டுநரிடம் பயணிகள் பணம் கொடுத்து சுங்கவரியை கட்டினர்.

அரசு பேருந்திற்கு சுங்கவரி கேட்டு வெகுநேரமாக சுங்கச்சாவடியில் பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர். மேலும் அரசு பேருந்திற்கு சுங்கவரி வசூலித்தவர்கள் மீது போக்குவரத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

Also Read: விளை நிலங்களை அழித்து புதிதாக 23 தேசிய நெடுஞ்சாலைகள் கொண்டு வரும் மோடி அரசு: சுங்க கட்டணம் உயர வாய்ப்பு?