Tamilnadu

ஹாத்ரஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு, தி.மு.க மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி - கனிமொழி எம்.பி அழைப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாளை (அக்டோபர்-5) மாலை 5:30 மணியளவில், கிண்டி ராஜீவ் காந்தி சிலையில் இருந்து நான் தொடங்கி வைக்க, தி.மு.கழகத்தின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் கையில் ஒளியேந்தி பேரணி நடைபெறும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தி.மு.க மகளிரணி தலைமையில், நாளை ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெறும் பேரணியில், கழக மகளிரணி, மகளிர் தொண்டரணியினர் வேண்டும் என தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

“உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டகொடூரத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவும் அமைந்திருக்கின்றன.

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவர்களும், பிரியங்கா காந்தி அவர்களும் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்ணினத்தின் மீதான இந்த அடக்குமுறை ஆதிக்க வாதத்தை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி சார்பில், அக்டோபர் 5 ஆம் தேதி மாலை சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துவார்கள் என கழகத் தலைவர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

தலைவரது அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் விதமாக, தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கிய, இந்த கண்டனப் பேரணியில் கழக மகளிரணி, மகளிர் தொண்டரணியினர் திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.

கையில் அனைவரும் மெழுகுவர்த்தி ஒளியேந்தி அமைதியான முறையில் நமது கண்டனத்தை அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும். அதேநேரம் தொற்றுப் பரவலுக்கு நாம் எந்த வகையிலும் காரணமாகிவிடக் கூடாது என்ற பொது நலனின் அடிப்படையில் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியோடு இந்த பேரணியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஹாத்ரஸ் சம்பவத்தை எதிர்த்து நாளை தி.மு.க மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!