Tamilnadu

“சக்கரநாற்காலி கூட இல்லை” : UPSC தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளிக்கு தேர்வுத் துறையால் நேர்ந்த அவலம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்( UPSC ) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. முன்னதாக, கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, இறுதியாக அக்டோபர் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் இன்று 72 நகரங்களில் 2,569 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சுமார் 10.58 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில், தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்ட மையங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றகின்றனர்.

இதில், சென்னையில் மட்டும் 62 தேர்வு மையங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில், காலை 09.30 மணிக்கு முதற்கட்ட தேர்வு தொடங்கிய நிலையில், பிற்பகல் 02.30 மணிக்கு இரண்டாம் கட்டத்தேர்வும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில், கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிக்கு முறையான வசதிகளை கூட தேர்வாணையம் செய்துத் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, சென்னை எக்மோரில் உள்ள தேர்வு மைத்திற்கு, தேர்வு எழுதுவற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் வந்துள்ளார். கடுமையான சோதனைக்கு பிறகு தேர்வு எழுந்தச் சென்ற அவருக்கு மாற்றுத்திறனாளிக்கு அமர்ந்து செல்லும் பிரத்தியோக சக்கரநாற்காலி கூட அங்கு இல்லை.

இந்நிலையில், தேர்வு எழுதும் இடத்தில் மாற்றுத்திறனாளிக்கு ஏற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யாததால், அவரை சுழல் நாற்காலியில் அமரவைத்து ஒருவர் இழுத்துச் சென்று தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த நபர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலி கூட ஏற்பாடு செய்து கொடுக்காமல், சுழல்நாற்காலியைக் கொடுத்துள்ள தேர்வுத் துறைக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேப்போல் பல்வேறு இன்னல்களை தேர்வு எழுத வந்தவர்கள் சந்தித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read: ஹாத்ரஸ் சம்பவத்தை எதிர்த்து நாளை தி.மு.க மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!