Tamilnadu

சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட அ.தி.மு.க பிரமுகர்கள்: போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே நேற்று முன் தினம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமாநில பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியது.

இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை அ.தி.மு.க பிரமுகர் உட்பட மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் புதிய பேருந்து நிலையம் அருகே கீழ வீதியில் இயங்கும் (வேதா மெஸ்) தனியார் உணவு விடுதியில் தாய்க்கு துணையாக 10 வகுப்பு பயிலும் 16 வயது மாணவி வேலைக்கு சென்று உள்ளார்.

அப்போது, உணவு விடுதி நடத்தி வரும் அதன் உரிமையாளர் சண்முக சுந்தரம் ஆசை வார்த்தை கூறி பலமுறை மாணவியிடம் பாலியல் வன்கொடுமை ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த மாணவியின் தோழி துர்கா தேவி தனது கணவர் அரவிந்தனிடம் இச்சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அரவிந்தன் 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது நண்பர் விஜயன் மற்றும் உணவு விடுதி உரிமையாளர் சண்முக சுந்தரம் இணைந்து பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும், இம்மூவரும் இணைந்து பல்வேறு நபர்களுக்கு 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவுக்காக அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவி செய்வதறியாமல் தாய் தந்தையிடம் இச்சம்பவம் குறித்து தகவல் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் இச்சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், விடுதியின் உரிமையாளர் சண்முக சுந்தரத்தை வைத்து கொண்டு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.

இச்சம்பவம் அறிந்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர்கள் குவிந்ததால், வேறு வழியின்றி கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உதவிய அ.தி.மு.க பிரமுகர்கள் துர்கா தேவி, அவரது கணவர் அரவிந்தன், மற்றும் விஜயன் ஆகிய மூவரை 1ம் தேதி போஸ்கோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட 60 வது வயதான சண்முக சுந்தரம் அ.தி.மு.க அமைச்சரான ஒ.எஸ்.மணியனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் காவல்துறையினர் கைது செய்யாமல் தலைமறைவாக இருப்பதாக தெரிவித்து வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அ.தி.மு.க பிரமுகர் சண்முக சுந்தரத்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

அ.தி.மு.க பிரமுகர் சண்முக சுந்தரத்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்க விட்டால் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என உறவினர்கள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அவசர அவசரமாக சண்முக சுந்தரத்தை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.