Tamilnadu

உலக சுற்றுலா தினம்: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த 30,000 சுற்றுலா தொழிலாளர்கள் - கண்டுகொள்ளாத தமிழக அரசு!

விண்ணை முட்டும் அளவிற்கு அழகிய மலைகள் , கண்ணுக்கெட்டும் தூரம் வரை அடர்ந்த வனங்கள், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேலென காட்சியளிக்கும் பசுமை, நூற்றுக்கணக்கான நீர்வீழ்ச்சிகள், மேகமூட்டம் குளு குளு காலநிலை என சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்வது மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 30 முதல் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவது வழக்கம். இதன் மூலம் அரசுக்கும் இங்குள்ள சுற்றுலா தொழிலாளர்களுக்கும் நல்ல வருவாய் இருந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுற்றுலா சாலையோர கடை வியாபாரிகள், தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்கா புகைப்பட கலைஞர்கள், குதிரை சவாரி மேற்கொள்வோர், சுற்றுலா வாகன ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள் என்று 30 ஆயிரம் குடும்பங்கள் சுற்றுலாத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினமான இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கலாச்சார நடனங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திருவிழாக் கோலம் கொண்டிருக்கும் இந்நாளில் கொரோனா என்ற கொடிய தொற்றால் பெரும்பாலான சுற்றுலா ஸ்தலங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுவது சுற்றுலா தொழிலாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மார்ச் 17ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா ஸ்தலங்களும் மூடப்பட்டு தற்போது வரை திறக்கப்படாமல் உள்ள நிலையில் தமிழக அரசு விளம்பரத்திற்காக சுற்றுலா ஸ்தலங்கள் திறக்கப்படும் என ஒரு போலியான அறிக்கை வெளியிட்டு, அதன்பின் தாவரவியல் பூங்கா உட்பட சில தோட்டக்கலைத்துறை பூங்கா மட்டும் திறக்கப்படும் என அறிவித்தது.

அதுவும் நாளொன்றுக்கு 100 இ- பாஸ் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஒரு அறிவிப்பை அறிவித்தது. இதனால் நீலகிரியில் உள்ள 30 ஆயிரம் சுற்றுலா தொழிலாளர்களுக்கும் எவ்வித பயனும் இல்லாத நிலையில் சில சுற்றுலா தொழிலாளர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் இந்நாளில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி வாழ்வாதாரம் இன்றி வறுமைக்கு தள்ளப்பட்ட சுற்றுலா தொழிலாளர்கள் 200 ரூபாய் தினக்கூலி வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இன்றி தள்ளப்பட்டுள்ள சுற்றுலா தொழிலாளர்களை தமிழக அரசு இதுவரை கண்டுகொள்ளாத நிலையில் இன்று உலக சுற்றுலா தினம் உதகையில் எவ்வித ஆடம்பர நிகழ்வும் இல்லாமல் பிசுபிசுத்தது.

வாழ்வாதாரம் இன்றி தற்போது வறுமையில் தவிக்கும் சுற்றுலா தொழிலாளர்களை காப்பாற்றுமா தமிழக அரசு! உடனடியாக இப்பாஸ் ரத்து செய்யப்பட்டு அனைத்து சுற்றுலா ஸ்தலங்களை திறக்க வேண்டும், சுற்றுலா தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10,000 நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என நீலகிரியில் உள்ள 32 சுற்றுலா சங்கங்கள் உலக சுற்றுலா தினமான இன்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வறுமையில் உள்ள சுற்றுலாத் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: 5 மாதங்களுக்குப் பிறகு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மீண்டும் திறப்பு : பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!