Tamilnadu

245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு!

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவரது மகள் கவிநிலாவுக்கும், சிவகாசியில் பிரபல பேக்கரி கடை வைத்திருக்கும் ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் துளசி ராமுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்குப் பெண் வீட்டில் இருந்து வரதட்சணையாக 230 சவரன் நகையைக் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் சீமந்தத்திற்கும் கூடுதலாக 45 சவரன் நகையையும் வழங்கியுள்ளனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 9 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், கணவன் துளசிராம் தன் மனைவி கவிநிலாவிடம் தனக்கு இன்னும் அதிகமாக வரதட்சணை வேண்டுமென்று கேட்டுள்ளார். இதைக் காரணமாக வைத்து அடிக்கடி கவிநிலாவை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே கணவரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் கவிநிலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரின் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். மேலும் தன் மகளைச் சமாதானப்படுத்திய பெற்றோர் கவிநிலாவை கணவர் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு தன் மளுக்கு மேலும் வரதட்சணையாக 45 லட்சம் ரூபாய் தருவதாக மாப்பிள்ளை வீட்டில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 22ம் தேதி கவிநிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோருக்கு தொலைப்பேசி மூலம் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவலை கேட்டுப் பதறிப் போன கவிநிலாவின் பெற்றோர் சிவகாசிக்குச் சென்று பார்த்தபோது மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில், கவி நிலாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து கவிநிலாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கவி நிலாவின் தந்தை ஆறுமகச்சாமி கூறுகையில், “தன் மகள் தூக்கிட்டு இறந்ததற்கான எந்தவித தடயமும் இல்லை என்றும் என் மகளின் கழுத்தில் இறுக்கப்பட்டதற்கான எந்த காயமும் இல்லை.

நாங்கள் வந்த போது என் மகளின் உடல் காரில் வைக்கப்பட்டது எதற்காக என்பன போன்ற பல சந்தேகங்கள் உள்ளன. எனவே இவர்கள் என் மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம்” என தெரிவித்தார்.

இந்தநிலையில் பொற்ரோரின் புகாரின் பேரில், சிவகாசி காவல் துறையினர் கவிநிலாவின் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கைச் சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.