Tamilnadu

மதுரை, தேனி உட்பட 8 மாவட்டங்களில் நாளை கன - மிக கனமழைக்கு வாய்ப்பு.. செப்.,3 வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை

ராஜஸ்தான், டெல்லி வழியாக வடக்கு வங்கக்கடல் வரை செல்லும் தென்மேற்கு பருவ மழைக்கு காரணமாக விளங்கும் மைய அச்சு வரும் நாட்களில் இமயமலை அடிவாரத்தை நோக்கி நகர்வதனாலும், தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் இன்று உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும், மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழையும், நாளை (31.08.2020) மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி (தூத்துக்குடி) 3 செ.மீ, தேவகோட்டை (சிவகங்கை) 2 செ.மீ, குந்தா பாலம் (நீலகிரி) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஆகஸ்ட் 30 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதேபோல ஆகஸ்ட் 30, 31 ஆம் தேதிகளில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்திலும் மேலும், குஜராத் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 03 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.