Tamilnadu

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னையில் லேசான மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேடசந்தூர், புகையிலை தோட்டம் (திண்டுக்கல்) தலா 13 செ.மீ , முசிறி (திருச்சி) 9 செ.மீ, பரமத்தி (கரூர்), தேவலா (நீலகிரி) தலா 8 செ.மீ, வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மருங்காபுரி (திருச்சி) தலா 7 செ.மீ, பரமத்திவேலூர் (நாமக்கல்) 6 செ.மீ, விராலிமலை (புதுக்கோட்டை) 5 செ.மீ, சோலையார் (கோவை), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), வீரகனூர் (சேலம்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்ட் 25ல் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 29 வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 26.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 2.8 மீட்டர் வரை எழும்பக்கூடும்.