Tamilnadu

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உள்மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக

ஏற்காடு (சேலம்), பாப்பிரெட்டிப்பட்டி தானியங்கி மழைமானி (தர்மபுரி) தலா 8 செமீ, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகம் (தர்மபுரி), மேட்டூர் (சேலம்) தலா 7 செமீ, பேரையூர் (மதுரை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), செட்டிகுளம் (பெரம்பலூர்) தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 27 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26 வரை குஜராத் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 24.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.