Tamilnadu

“அ.தி.மு.க கட்சி பணம் தேவையில்லை” : அமைச்சர் மூலம் பெற்ற பணத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்த மிசா போராளி!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் செய்து வருகின்றனர். இந்ந சூழலில் கொரோனா பேரிடர் காலத்தை பயன்படுத்தி, சில கட்சியினர் மாற்றுக் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுவருவது தொடர்கதையாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.க பொறுப்பாளரும் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு உதவித்தொகை வழங்கினார்.

அந்த நபருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பில் சேர்ந்த முன்னாள் தி.மு.க அவைத் தலைவரும், மிசா கைதியாக இருந்த சொக்கு என்ற கருப்பையாவுக்கு வியாழக்கிழமை ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை அ.தி.மு.கவினர் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று அ.தி.மு.க கட்சி நிதியில் இருந்து பெற்ற உதவி தொகையை திருப்பி அளிப்பதாக மிசா போராளி சொக்கு என்ற கருப்பையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருப்பையா கூறுகையில், “தன்னை மோசம் செய்து தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்பட்டுள்ளது தமக்கு இப்போதுதான் தெரியும்.

எனக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை கொரோனா காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவித்தொகை என்று கூறிதான் அமைச்சர் தன்னிடம் வழங்கினார். ஆனால், இன்றைய நாளிதழ்களில் அமைச்சர் தனக்கு வழங்கிய பணம் அ.தி.மு.க கட்சியின் நிதியிலிருந்து வழங்கப்பட்டது என்று வந்திருந்தது. இது தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது“ எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், தனக்கு இந்த தொகையை பெற்றுத் தந்த கதிரவனை அழைத்தே இந்த பணத்தை தான் திருப்பி கொடுப்பேன் என்றும் அல்லது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வரைவு காசோலை மூலம் இதை அனுப்பி வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: கள்ளழகர் விழா நடைபெறவில்லை; அப்போது யாரும் போராடவில்லை: பிள்ளையார் சதுர்த்திக்கு மட்டும் துடிப்பது ஏன்?