Tamilnadu

"அரசின் அனுமதி பெற்றுத்தான் தேர்வுக் கட்டணம் வசூலிக்கிறோம்”- அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதிலால் அதிர்ச்சி!

ஊரடங்கு காலத்திலும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்கள் அனைத்து வகையான கட்டணமும் செலுத்த உத்தரவிட்டிருப்பதோடு, நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளிவரும் எனவும் அராஜகம் செய்து வருகிறது.

நடத்தப்படாத தேர்வுக்கு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பதிவு எண்ணை உள்ளீடு செய்தால் தேர்வுக் கட்டணம் செலுத்தாததற்கான குறியீடே காட்டப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவை அறிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. மேலும் தேர்வுக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 30ஆம் தேதி கடைசி நாள் என்றும், அபராத தொகையுடன் செலுத்த செப்டம்பர் 5 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தி இத்தகைய அறிவிப்பு மாணவர்களையும், அவர்தம் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, “தமிழக அரசின் அனுமதி பெற்றுத்தான் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது, சான்றிதழ்கள் அச்சடிப்பது என்று இதர பணிகளுக்கான செலவுகள் இருப்பதால் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கட்டணம் வசூல் செய்வதில், பல்கலைக்கழகம் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: நடத்தப்படாத தேர்வுக்கு கட்டணம் செலுத்தாதவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு - அண்ணா பல்கலை. அராஜகம்!